இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில், கடலில் மூழ்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியான், உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ், சாம்சன், செந்தில்குமார் ஆகியோர் கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில், மீனவர்களின் படகு மூழ்கியதாக சக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மீனவர்களை மீட்கச்சென்ற படகுகளை, இலங்கை கடற்படை விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது. படகு மூழ்கியதால் மாயமான 4 மீனவர்களும் தேடப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
இந்நிலையில் மீனவர் இறப்புக்கு நீதி கேட்டும், அவர்களின் சடலத்தை சொந்த ஊர் கொண்டு வர வலியுறுத்தியும், கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.